(எம்.மனோசித்ரா)
வானொலி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை அதிக சத்தமாக கேட்பதால் அல்லது பார்ப்பதால் இரவு வேளைகளில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இரவு வேளையில் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இரவில் கற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் அயலவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி அல்லது வானொலி அதிக சத்தத்துடன் பார்க்கப்படுவதாக அல்லது கேட்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், தமது சூழலுக்கு மாத்திரம் போதுமான சத்தத்தில் இவற்றை பாவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment