புர்கா தடையை இலங்கை அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா...? - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

புர்கா தடையை இலங்கை அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா...?

‘‘இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வதைத் தடை செய்வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் நேற்று நான் கையெழுத்­திட்­டுள்ளேன். விரைவில் அதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை வழங்கும்’’ என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சரான ஓய்­வு­பெற்ற ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர கடந்த சனிக்­கி­ழமை (13) களுத்­து­றையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இதே தக­வலை ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­காணல் ஒன்­றிலும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து இவ்­வி­வ­காரம் உள்நாட்டில் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச ஊட­கங்­க­ளிலும் முக்­கிய பேசுபொ­ரு­ளாக மாறி­யது.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 10ஆவது மற்றும் 14ஆவது சரத்தின் பிரகாரம் சமயச் சுதந்­திரம் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சரத்துக்களின் பிர­காரம், சகல சம­யங்­க­ளுக்­கு­மான பாது­காப்பை உறுதி செய்­வது அரசின் கடமை என்­ப­துடன் நப­ரொ­ரு­வரின் விருப்பத்தின் பிர­காரம் சம­யத்தை தெரிவு செய்து கொள்­வ­தற்­கான உரிமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சமயம் தொடர்­பான ஒன்றுகூடல், வழி­பாடு மற்றும் சமய போதனை என்­ப­ன­வற்­றுக்­கான உரிமை ஆகி­ய­வற்­றினை வழங்­கி­யுள்­ளது.

இது போன்று, உல­க­ளா­விய மனித உரி­மைகள் பிர­க­ட­னத்­திலும் சமய சுதந்­திரம் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய அவ­ரவர் தமது சம­யங்­களை, நம்­பிக்­கை­களை, சுதந்­தி­ரத்தை தனிப்­பட்ட ரீதியிலோ மற்­ற­வர்­க­ளோடு சேர்ந்து சமூ­க­மா­கவோ, இரகசியமாகவோ, பகி­ரங்­க­மா­கவோ மாற்றிக் கொள்ளல், தனது சமயம், போத­னைகள் மீதான நம்­பிக்­கைகள், பின்­பற்றல், வழிபடுதல், அவற்றை அனு­ச­ரித்துச் செல்லல் என்­ப­ன­வற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான உரி­மைகள் உள்­ளன.

இதற்கு மேல­தி­க­மாக ICCPR என்று அழைக்­கப்­படும் சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையின் 18ஆவது சரத்­திலும் சயமச் சுதந்­திரம் பற்றி விரி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட பிர­க­டனம் மற்றும் ICCPR உடன்­ப­டிக்கை ஆகியவற்றில் இலங்கை கையெ­ழுத்­திட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இலங்­கையில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்சி­யாக பல்­வேறு விரும்­பத்­த­காத நிகழ்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே “முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவிற்கு இலங்­கையில் தடை ­வி­திக்­கப்­ப­ட­வுள்­ளது. புர்கா அணிவதால் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டக்­கூடும். சிறு வயதில் நான் பழ­கிய முஸ்லிம் நண்­பர்­களின் குடும்­பங்­களில் எந்தவொரு சந்­தர்ப்­பத்­திலும், புர்கா என்ற ஆடையை அணியவில்லை. மத அடிப்­ப­டை­வா­தி­களால் இலங்­கையில் அண்மைக்காலத்­தி­லேயே புர்கா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதால், அதற்கு கட்­டா­ய­மாக தடை விதிக்­கப்­படும்’’ எனவும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரான சரத் வீர­சே­கர கருத்து வெளியிட்டமையானது இலங்­கையில் முஸ்­லிம்கள் மீதான மத அடக்கு­மு­றையின் மற்­று­மொரு நகர்­வா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.

பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்­கொலை தாக்­குதல் கார­ண­மாக 269 பேர் உயிரி­ழந்­தி­ருந்­த­துடன், சுமார் 400 இற்கும் அதி­க­மானோர் காயமடைந்­தி­ருந்­தனர்.

இந்த தாக்­கு­தலை தொடர்ந்து அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­ன­வினால் நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவசரகால சட்ட பிர­க­ட­னத்தின் ஊடாக புர்கா உள்­ளிட்ட முகத்தை மூடும் ஆடை­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டது.

இந்த தடை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை தொடர்ந்­தது. எனினும் ஓகஸ்ட் 22ஆம் திக­திக்கு பின்னர் அவ­சர காலச் சட்டம் நீடிக்­கப்­ப­டா­மை­யினால் புர்­கா­விற்­கான இந்த தடை செய­லி­ழந்­தது.

இவ்­வா­றான நிலையில் ஈஸ்டர் தற்­கொலை தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையில் புர்­கா­வினை தடை செய்­யு­மாறு சிபா­ரிசு செய்யப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை தொடர்பான வாக்­கெ­டுப்பு 22ஆம் திகதி (நாளை பிற்போடப்பட்டுள்ளது) இடம்­பெ­ற­வுள்ள நிலையிலேயே இந்த அறி­விப்பு வெளி­யா­னமை சர்­வ­தேச சமூகத்தினதும் மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளி­னதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

இந்த செய்­திக்கு சர்­வ­தேச ஊட­கங்­களில் அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டது. அது மாத்­தி­ர­மல்­லாமல் முஸ்­லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் புர்கா தடைக்கு சமூக ஊட­கங்­களில் எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா போன்ற பல அமைப்­புக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் இந்த தடைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரியும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் எம்.எம்.சுஹைர் “இந்த தடை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும்” என்றார்.

முகத்­திரை அணி­வதை தடுப்­பது தொடர்பில் சட்டம் கொண்டுவருவதற்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வும் எதிர்ப்பு வெளி­யிட்­டது.

“மதம் அல்­லது நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் பாகு­பாடு மற்றும் சகிப்­புத்­தன்மை காட்­டு­வது மனித கண்­ணி­யத்­திற்கு ஒரு அவமதிப்பாகும்” என சமய சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகளின் விசேட அறிக்­கை­யாளர் அஹமட் சஹீத் தெரிவித்துள்ளார். இந்த தீர்­மானம், ஐக்­கிய நாடுகள் சாச­னத்தின் கொள்­கை­களை மறுப்­பது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை அமைச்சர் சரத் வீர­சே­க­ரவின் கருத்தை கண்­டிப்­ப­தாக இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான கூட்­ட­மைப்பின் சுயா­தீன நிரந்­தர மனித உரிமை ஆணைக்­கு­ழுவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்­சரின் கருத்­தா­னது ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் 18 மற்றும் 27 ஆவது சரத்­து­களை மீறு­வ­தாக உள்­ள­தா­கவும் அவ்வமைப்பு தெரி­வித்­துள்­ளது. 

அத்­துடன் அமைச்­சரின் கருத்தை இலங்கை அர­சாங்கம் பகிரங்கமாக மறு­த­லிக்க வேண்டும் என்றும் ஓ.ஐ.சி. காட்­ட­மாகக் குறிப்­பிட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு ஆதரவு தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள பாகிஸ்தான், இந்த தடை தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருந்­த­துடன் இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸாத் கட்டாக் இது தொடர்பில் ட்விட்டர் பதி­வொன்றை வெளி­யிட்­டி­ருந்தார்.

“புர்­காவை இலங்­கையில் தடை செய்­வது சாதா­ரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பூகோள ரீதி­யான முஸ்­லிம்­களின் மனோ நிலையை பாதிக்கும். தற்­போது கொவிட்-19 தொற்று கார­ண­மாக பொரு­ளா­தார பிரச்­சினை உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­களை எதிர்நோக்கும் தரு­ணத்தில் இந்த விடயம் வெளிப்­பட்­டுள்­ளது. பாதுகாப்பு என்ற பெயரில், இந்த விட­யத்தை முன்­னெ­டுப்­பது, சர்வதேச ரீதி­யாக பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும். இது தவிர, சர்­வ­தேச ரீதி­யாக நாட்­டி­லுள்ள சிறு­பான்மை மக்­களின் அடிப்படை மனித உரிமை மீறல்­களை வெளிப்­ப­டுத்தும் விட­ய­மாக கருத முடியும்” என்றார்.

புர்கா தடைக்கு எதி­ராக கருத்து வெளி­யிட்ட கொழும்­பினை தளமாகக் கொண்டு செயற்­படும் இரா­ஜ­தந்­திரி இவர் மாத்திரமேயாவார்.

இலங்கை விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் பகி­ரங்­க­மாக கருத்து வெளி­யி­டு­வ­தில்லை. குறிப்­பாக கட்­டாய ஜனாஸா எரிப்பு விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு முஸ்லிம் நாடுகள் பல அழுத்­தங்­களை பிர­யோ­கித்­த­போதும் பகி­ரங்­க­மாக எதையும் கூற­வில்லை. இவ்வாறான நிலை­யி­லேயே பாகிஸ்தான் உயர் ஸ்தானி­கரின் பகிரங்க அறிக்கை முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கி­றது. 

அது­மாத்­தி­ர­மன்றி இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னிகர், வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவை கடந்த 16ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நேரில் சந்­தித்து புர்கா தடை தொடர்­பான பாகிஸ்­தானின் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.

இத­னி­டையே புர்­கா­வினை தடை செய்யும் அர­சாங்கம் ஏன் நிகாபினை தடை செய்­ய­வில்லை என சமூக ஊட­கங்­களில் தொடர்ச்சி­யாக கேள்வி எழுப்­பப்­பட்டு வந்­தன. இத­னை­ய­டுத்து புர்கா மற்றும் நிகாப் ஆகிய இரண்­டையும் தடை செய்­ய­வுள்­ள­தாக மீண்டும் அமைச்சர் சரத் வீர­சே­கர கடந்த திங்­கட்­கி­ழமை (15) தெரிவித்தார்.

எனினும் அனை­வ­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்ட புர்கா தடைக்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­பக்ஷ தலை­மையில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 

இது குறித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (16) இடம்­பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, “இந்த புர்கா தடை­யினை ஒருபோதும் அவ­ச­ரப்­பட்டு மேற்­கொள்ள முடி­யாது. இது தொடர்பில் விரி­வான கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொண்ட பின்­னரே தீர்மானிக்­கலாம். தேசிய பாது­காப்பை கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வி­வ­காரம் எந்த வகை­யிலும் ஜெனீவா அமர்­வு­களில் தாக்கம் செலுத்­தாது’’ என அவர் பதி­ல­ளித்தார்.

அத்­துடன் “இலங்­கையில் நீண்ட கால­மாக முஸ்லிம் மக்­க­ளு­ட­னான சுமுக உறவு பேணப்­ப­டு­கி­றது. அதில் எவ்­வித சிக்­கலும் காணப்படவில்லை. இலங்­கையில் மாத்­திரம் இந்த தடைக்­கான நடவ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. உலக நாடுகள் பலவும் இந்த புர்­காவை தடை செய்­துள்­ளன” என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்­புக்­வெல்ல கூறினார்.

இதே­வேளை, புர்கா மற்றும் நிகாப் அணி­வதைத் தடை செய்வதற்கான தீர்­மானம் அர­சாங்­கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளி­வி­வ­கார அமைச்சு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (16) அறி­வித்­தது. “இது ஒரு முன்­மொ­ழிவு மாத்திரமே. இது கலந்­து­ரை­யா­டல்­களின் கீழ் உள்­ளது” என வெளியுறவுச் செய­லாளர் அட்­மிரல் பேரா­சி­ரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் தேவைப்­படும் முன்னெச்சரிக்கை நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டையில் இந்த யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது’’ என அவர் குறிப்­பிட்டார்.

சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­ட­னு­மான ஒரு பரந்த உரையாடலை அர­சாங்கம் ஆரம்­பிப்­ப­துடன், தேவை­யான ஆலோசனைகள் நடை­பெ­று­வ­தற்­கா­கவும், ஒரு­மித்த கருத்தை எட்டுவ­தற்­கா­கவும் போது­மான கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.

இதேவேளை, “பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கேற்ற விதத்திலேயே நாம் செயற்படுகின்றோம்” என அமைச்சர் சரத் வீரசேகர கூறினார். 

புர்கா தடை தொடர்பான விடயம் விரைவில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் புர்கா தடை தொடர்பான தீர்மானத்தினை கைவிட்டுள்ளதாக அரசாங்கம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதனால் குறித்த விடயம் ஜெனீவா பிரே­ரணை முடி­வ­டையும் வரை தற்­கா­லி­க­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது என்றே முஸ்­லிம்கள் நம்­பு­கின்­றனர். 

மார்ச் மாத இறு­தியில் ஜெனீவா அமர்­வுகள் முடி­வுக்கு வர­வுள்ள நிலையில் அதன் பிற்­பாடு அர­சாங்கம் மீண்டும் இந்தத் தடையை அவ­ச­ரப்­ப­டுத்­து­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை மறுப்­ப­தற்­கில்லை.

உள்­நாட்டில் இதற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவோ போராடவோ பலரும் தயங்குகின்ற நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மாத்திரமே இலங்கை முஸ்லிம்களுக்கு கைகொடுக்கும் என்பது நிதர்சனம். 

VIdivelli

No comments:

Post a Comment