பஸ்ஸில் தவற விடப்பட்ட இரண்டரை லட்சம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசி ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்த பஸ் நடத்துனர் அதனை உரியவரிடம் ஒப்படைத்து முன்மாதிரியாக செயற்பட்ட சம்பவம் இ.போ.ச. சாலையில் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பருத்தித்துறை - கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் வண்டி கடந்த 2ஆம் திகதி கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து சாலியபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் இரண்டு இலட்சத்து 51ஆயிரம் ரூபா ரொக்க பணமும் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசி உட்பட வேறு சில பொருட்களும் கைப் பையை தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில் அன்று நடத்துனராக கடமையாற்றிய புலோலி, குரும்பைகட்டி பகுதியைச் சேர்ந்த பா.பாலமயூரன் என்பவர் அதனை எடுத்து பருத்தித்துறை இ.போ.ச முகாமையாளரிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில் கைப்பை அனுராதபுரம் சாலியபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்தகுமார என்பவருடையது என அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து நேற்று பருத்தித்துறை சாலையின் உதவி முகாமையாளர் சிதம்பரப்பிள்ளை சிவசெல்வநாதன் முன்னிலையில் அவரின் கைப்பை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பையை தவறவிட்டவர் நடத்துனருக்கு அன்பளிப்பை கொடுக்க முற்பட்ட போதும் அவர் அதனை ஏற்கவில்லை.
நாகர்கோவில் விஷேட நிருபர்
No comments:
Post a Comment