பங்களாதேஷில், இந்திய பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

பங்களாதேஷில், இந்திய பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (26) பங்களாதேஷத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பங்களாதேஷத்தின் 50வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. 

இன்று காலை பிரதமர் மோடி அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். 

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 

பங்களாதேஷத்தின் 50வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து இன்று அவர் பங்களாதேஷத்திற்கு சென்றுள்ளார்.

இன்று காலை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். 

இதனை தொடர்ந்து பங்களாதேஷத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உட்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் பொலிசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

போராட்டக்காரர்கள் டாக்கா வீதிகளில் பேரணி செல்ல முயன்ற போதுதான் நிலமை கையை மீறி சென்றது என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இரு வேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல்தான் இந்த வன்முறைக்கு காரணம் என அரசை எதிர்த்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரசுக்கு ஆதரவான நிலை கொண்ட மாணவர்கள்தான் போராட்டத்தை வன்முறையாக மாற்றி விட்டனர் எனவும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment