ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும், துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் இன்று (24) காலமானார்.
இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளரும், ஷேக் ஹம்தானின் சகோதரருமான ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் அவரது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம், உயிரிழந்த தனது சகோதரரின் புகைப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “நாங்கள் அல்லாஹ்க்கு சொந்தமானவர்கள், அவனிடமே நாங்கள் திரும்புவோம். இறைவன் உங்களுக்கு இரக்கம் காட்டட்டும், என் சகோதரர், என் ஆதரவும் என் தோழரும் ஆவார்” என பதிவிட்டுள்ளார்.
துணை ஆட்சியாளர் மறைந்ததையடுத்து 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என துபாய் அறிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரசு அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ஜனாஸா நல்லடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹம்தான் 1971 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி அமைச்சராக பணியாற்றினார், மேலும் 2006 இல் துபாயின் துணை ஆட்சியாளராகவும் ஆனார்.
துபாய் நகராட்சி, அல் மக்தூம் அறக்கட்டளை, துபாய் அலுமினியம் (DUBAL) மற்றும் துபாய் நேச்சுரல் கேஸ் கம்பெனி லிமிடெட், துபாய் உலக வர்த்தக மையம் போன்ற பல உயர் மட்ட அரசு நிறுவனங்களுக்கு ஷேக் ஹம்தான் தலைமை தாங்குகிறார்.
No comments:
Post a Comment