நாட்டில் எவ்வித வேறுபாடுகளுமின்றி கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குற்றுவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகுபாடு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று திங்கட்கிழமை பதிவொன்றைச் செய்திருந்தார்.
அப்பதிவில் 'இன்று பாகுபாடு ஒழிப்பு தினமாகும். இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் வயது, பாலினம், இனம், உடல் மொழி மற்றும் நம்பிக்கைகள் ஆகிய வேறுபாடுகள் எவையுமின்றி இந்த நாட்டில் வாழும் பிரஜைகள் அனைவரும் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது தூர நோக்குடைய உங்கள் மேன்மையான கருத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். வாய் வழியாகக் கூறுகின்றவற்றை செயற்படுத்துவதென்பது இன்னமும் தாமதமாகிவிடவில்லை.
அதேவேளை வயது, பாலினம், இனம் மற்றும் நம்பிக்கை ஆகிய பாகுபாடுகளின்றி கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குற்றாமல் இதனை செயற்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment