(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான கண்காணிப்பு பொலிஸாரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 3,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,350 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 வாரங்களில் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்லக்கூடும்.
இவ்வாறு வெளியிடங்களுக்குச் செல்லும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்துகின்றோம்.
நாம் ஒவ்வொருவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாதவர்களாக இருந்தால் மாத்திரமே தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும். எனவே சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment