எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை முன்னிட்டு, எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு கற்கை விடுமுறையை வழங்க கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கலவி பெரேராவினால், அனைத்து மாகாண, வலய கல்விப் பிரிவு அதிகாரிகள், அதிபர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சைக்கு முன்னிலையாகும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்குவதானது, கற்கை விடுமுறைக்கு தடையாக அமையக்கக்கூடாது என, செயலாளர் அறிவுறுதியுள்ளார்.
2020 டிசம்பரில் இடம்பெற வேண்டிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள், இவ்வருடம் மார்ச் 01ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி நள்ளிரவு முதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை, சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல், அவற்றை நடாத்துதல் என்பன தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனுமான வினாக்கள் அடங்கிய பரீட்சைத்தாள்கள், அவ்வாறான பரீட்சைத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், வழங்குவதாக அறிவிப்பு செய்தல், துண்டுப் பிரசுரம், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இணையத்தளங்களின் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
1968ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொது பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமைய, ஜூன் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 1816ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் அல்லது நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்த்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1911 எனும் துரித இலக்கத்திற்கு அழைத்து முறையிடலாம் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment