அணு சக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணு சக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, தற்போது அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.
ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
இந்த சூழலில் அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளுடன் ஈரான் மீண்டும் இணங்கி நடந்தால் ஒரு நீண்ட மற்றும் வலுவான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இறங்கி வரும் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வலியுறுத்தியுள்ளார்.
வரும் 21ம் திகதிக்குள் அமெரிக்கா பொருளாதார தடைகளை தளர்த்தாவிடில், ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியதையும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment