அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உள்ளக நெருக்கடிகள் எதுவும் கிடையாது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் கருத்து வேறுபாட்டு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையீடு செய்து அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தனித்தனி பயணங்கள் கிடையாது என தெரிவித்துள்ள அவர், எவர் எங்கு எத்தகைய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டாலும் இறுதியில் பொதுஜன பெரமுனவுடனேயே ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் எமக்கு எந்த சிக்கல்களும் கிடையாது. அவரது கூற்று தொடர்பில் நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு அந்த சிக்கலை தீர்த்து வைத்துள்ளனர்.
பொதுஜன பெரமுன அரசாங்கமானது பல கட்சிகள் ஒன்றிணைந்து கட்டியெழுப்பிய அரசாங்கமாகும். அரசாங்கத்தில் செயற்படும் போது அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு செயற்பட்டால்தான் எமக்கு பலமான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment