போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக தயாரித்து மட்டக்களப்பு பகுதியில் விநியோகம் செய்து வந்த இருவரை கைது செய்த படையினர், இந்நடவடிக்கைளுக்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர். இவர்களிடமிருந்து சட்டவிரோத ஆவணங்களையும் விஷேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இடம்பெற்றது.
கைதான இருவரும் வாழைச்சேனை மாவடிச்சேனை பகுதியில் வசிப்பவர்களாவர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நடத்திய திடீர் சோதனையின்போதே, இவர்கள் கைதாகினர்.
செங்கலடிப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலைய மொன்றில், ஆட்டோவுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கையிலே, படையினர் இவ்விருவரையும் கைது செய்தனர்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பதவி விலகிச்சென்ற ஆணையாளர் நாயகத்தின் கையொப்பம் இடப்பட்டு இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்களில் "களர்" மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைதான இருவரையும் கைப்பற்றிய போலி ஆவணங்கள், முச்சக்கர வண்டி என்பவற்றையும் வவுணதீவு விசேட அதிரடிப் படையினர் மேலதிக நடவடிக்கைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மோசடி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(மட்டக்களப்பு நிருபர்)
No comments:
Post a Comment