கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் : எழுத்து மூலமான ஆவணம் கோரிய தொழிற்சங்கம் - பிரதமர் மஹிந்த கூறிய அதிரடி பதில்! - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் : எழுத்து மூலமான ஆவணம் கோரிய தொழிற்சங்கம் - பிரதமர் மஹிந்த கூறிய அதிரடி பதில்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கோ அல்லது சர்வதேச நிறுவனத்திற்கோ வழங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (01) முற்பகல் அலரி மாளிகையில் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார். 

அது 100 வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன இது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்ததை தொடர்ந்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச நிறுவனத்திற்கு முன்வைக்கும் போது குறித்த விடயங்களுக்கு அந்நிறுவனம் உடன்படாமையினால் கிழக்கு முனையத்தை 100 வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் பிற்பகலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்திற்கு கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் செயற்பாட்டை நாளை முதல் கைவிடுவதற்கும் தொழிற்சங்கத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்க தலைவர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் தனது 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றை தாம் தீர்த்துள்ள போதிலும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment