சாவகச்சேரி நகர சபை எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டு தற்போது இடை நடுவே கைவிடப்பட்டுள்ள மலக் கழிவுகளை உரமாக்கும் தொழிற்சாலையின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மாவட்ட செயலகத்தால் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மலக்கழிவுகளை உரமாக்கும் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் காணப்படுகிறது.
இருப்பினும் உரிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு திட்டம் ஆரம்பிக்கப்படாமல் பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வேறு நிதி மூலங்கள் ஊடாக முன்னெடுக்கவும் நகரசபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மலக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் அதனை கொட்டுவதற்கான இடத்தினை தேர்ந்தெடுத்தல் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டியது மிக அவசியம் என்றனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்
No comments:
Post a Comment