பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினை தேர்தல் கால ஊண்டியலாகப் பாவிக்கப்பட்டு வருவதாக கல்முனை மறுமலர்ச்சி மன்றத் தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் - பொலிகண்டி பேரணி, கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) இரவு கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், தேசிய ரீதியாக இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் எல்லை நிர்ணம். அதாவது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் பற்றியதாகும்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற பிரதேசங்கள் 100 வீதம் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளாகும். இவற்றை எந்த அடிப்படையில் கிராம சேவகர் பிரிவுகளைப் பிரித்தாலும், எந்தப்பாதிப்பின்றி அதிகரித்த அபிவிருத்தி நிதி வாய்ப்புக்கள் உருவாகும்.
ஆனால், கடந்த 30 வருடங்களுக்கும் மேலான கல்முனையில் புரையோடிப்போயுள்ள விடயம்தான் கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள இன ரீதியான சீர் கெட்ட நிர்வாக நடவடிக்கையாகும். இங்குதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு தீர்வு காண்கின்ற பொறுப்பு சகல சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர்களுக்கும் உண்டு. இங்கு கல்முனையில் என்ன நடக்கின்றதென்பதுதான் தற்போதைய விடயம்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது, முஸ்லீம்கள் தேசியப் பிரச்சினைகளில் புறக்கணிக்கப்பட்டார்கள் எனக்கூறித்தான் உருவாக்கினார்கள்.
தேசிய தீர்வுகள் சம்பந்தமாக முஸ்லீம் காங்கிரஸ் எந்தத் தீர்வுகளையும் முன்வைக்கவில்லை. மாகாண சபை சட்ட திட்டங்களின் போது, எல்லை நிர்ணயத்தில் கூட எதுவும் அவர்கள் செய்யவில்லை.
பிரதேச செயலகத்திலாவது இருந்து அந்த கட்சியின் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஏதாவது செய்கின்றார்களா? எனில் ஒன்றுமே இல்லை. சிவில் அமைப்புகள் செய்கின்றார்கள் என அவர்களின் தலைகளின் சுமத்தி விட்டு அவர்கள் ஒதுங்கியுள்ளார்கள். மக்கள் இவர்களைத் தெரிவு செய்து அனுப்பியது இவ்விடயத்திற்குத்தான்.
2001.02.20ஆம் திகதி வர்த்தமானியூடாக கல்முனை பிரதேச செயலகம் பிரகடனப்படுத்தப்படுகின்றது. பாராளுன்ற சட்டத்தின்படி ஒரு அமைச்சர் ஒரு பிரதேசத்தின் பெயர் மற்றும் எல்லைகளை வர்த்தமானியில் குறிப்பிட முடியுமெனக் கூறப்படுகின்றது.
1989.12.14ஆம் திகதி திடீரென்று ஈ.என்.டி.எல்.ப் இயக்கத் தலைவர் கலாவின் தலைமையில் ஏனைய ஆயுதக் குழுக்களும் இணைந்து பிரதேச செயலகத்தைச் சுற்றி வளைத்து, அங்கு 30 தமிழ் அதிகாரிகளை வேறுபடுத்தி அதே கட்டடத்தில் மற்றுமொரு பிரிவில் தமிழ்ப் பிரதேச செயலகம் எனப் பெயரிடப்பட்டு சட்டவிரோதமாக ஆயுத முனையில் இயங்கியது.
அதன் பின்னர், குறித்த பிரதேச செயலகத்திற்கு சுனாமியின் பின்னர் கட்டடம் கட்டப்பட்டது. இதுதான் தற்போது கல்முனை உப பிரதேச செயலகம் என அழைக்கப்படுகின்றது. இதில் இன ரீதியாக எல்லைப் பிரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இலங்கையின் அரசியலமைப்பானது, இன ரீதியாக எல்லைப் பிரிப்புகள் இடம்பெற முடியாதெனக் கூறுகின்றது. ஆனால், இங்கு இன ரீதியான விடயங்கள் இடம்பெறுகின்றது. இவ்விடயங்களை வெளிக்கொணருவது எமது மக்கள் பிரதிநிதிகளின் வேலையாகும். ஆனால், அவ்வாறின்றி தேர்தல் கால ஊண்டியலாக பிரதேச செயலகம் பாவிக்கப்பட்டு வருகின்து.
அரசியல்வாதிகளுக்கு இப்பிரதேச செயலகம் நல்லதொரு மூலதனம். இந்த விடயம் தொடர்பில் சகல ஆவணங்களையும் கல்முனை மறுமலர்ச்சி மன்றமானது பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, தற்போது எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, பொருத்தமான முறையில் அந்த எல்லை நிர்ணயமானது பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment