வேலையற்ற அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கக் கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகிற்கு முன்பாக வேலையற்ற சித்த பட்டதாரிகள் சங்கம் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தது.
'அனைத்து வேலையற்ற சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கவும், தேர்தல் வாக்குறுதி வெறும் பேச்சில் மட்டுமா?, இன்னும் எத்தனை காலம் தான் இழுத்தடிப்பு?, எல்லா துறைகளுக்கும் வேலை வழங்கும் அரசே எம்மை நிராகரிப்பதேன்? கனவுகளோடு காத்திருக்கும் எமக்கு அரசின் பதில் என்ன? பட்டதாரிகளின் பட்டம் வீட்டிலேயே முடக்கப்படுமா?, சுதேச மருத்துவம் நாட்டிற்கு தேவையில்லையா?, ஆறு வருட படிப்பு நடுத்தெருவில் நிற்கவா?' போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் சித்த மருத்துவ வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் சித்த வைத்திய பட்டதாரிகள், சித்த வைத்திய உள்ளக பயிற்சி மாணவர்கள், உள்ளக பயிற்சிக்கு காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவ அலகு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் சித்த மருத்துவ துறையில் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பின் சித்த மருத்துவத் துறையினருக்கு எந்தவிதமான வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என இவர்கள் குறிப்பிட்டனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்
No comments:
Post a Comment