இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு : மரணத்திற்கான காரணம் என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு : மரணத்திற்கான காரணம் என்ன?

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் நேற்று புதன்கிழமை  உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்புக்காக ‘கோவேக்ஸின்' மற்றும் ‘கோவிஷீல்ட்' ஆகிய தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ஆம் திகதி தொடங்கப்பட்டது.

மான்னு பகான் என்ற அந்த சுகாதார பணியாளர் மெதண்டா என்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் கடந்த 1ஆம் திகதி அன்று மான்னு பகான் உட்பட 151 சுகாதார பணியாளர்களுக்கு ‘கோவிஷீல்ட்' தடுப்பூசி போடப்பட்டது.

மறுநாள் இரவு மான்னு பகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எந்தவிதமான நோயாலும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில் நேற்று (3) மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய சுகாதார இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், நாடு முழுவதும் 92,61,227 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பெப்ரவரி 1 ஆம் திகதி சுகாதாரப் பணியாளர் மான்னு பகான் என்பவருக்கு ராஞ்சியில் உள்ள அவரின் பணியிட மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார்.

இது குறித்து தனியார் மருத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பங்கஜ் சாஹ்னி கூறியதாவது ராஞ்சியில் உள்ள மெதண்டா மருத்துவமனையில் பணியாற்றி வந்த மான்னு மான்னு பகானுக்கு திங்களன்று அங்கேயே கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. 

மான்னு பகான் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 52 வயதான மான்னு பகானுக்கு இணை நோய்கள் இல்லை என்றாலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர், மான்னு பகான் ராஞ்சிக்கு அருகிலுள்ள ஓர்மஞ்சியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார், பெப்ரவரி 2 ஆம் திகதி கூட அவர் வேலைக்கு வந்தார் என மருத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து ஜார்க்கட் மாநிலத்தின் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கான அதிகாரி டாக்டர் அஜித் பிரசாத் பிடிஐயிடம் கூயிதாவது: ”செவ்வாய்க்கிழமை இரவு அவர் தனது கிராமத்தில் உடல்நலம் குன்றிய பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துள்ளார். 

அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய, அரசு நடத்தும் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவ வாரியத்தால் உடலில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். பெப்ரவரி 1 ஆம் திகதி மான்னு பகான் உட்பட மொத்தம் 151 சுகாதார ஊழியர்களுக்கு மெடந்தா மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.

மான்னு பகானுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் ஒன்பது பேர் தடுப்பூசி பெற்றனர், அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். எனவே, தடுப்பூசி காரணமாக அவர் இறந்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

தடுப்பூசி காரணமாக மான்னு பகான் இறந்தார் என்று கண்டறியப்பட்டால், ஜார்க்கண்டில் இதுபோன்ற முதல் பாதிப்பு இதுவாகும். என டாக்டர் அஜித் பிரசாத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment