எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவுமே பேரணியில் பங்கெடுத்தேன் - போலீஸ் வாக்குமூலத்தில் ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவுமே பேரணியில் பங்கெடுத்தேன் - போலீஸ் வாக்குமூலத்தில் ரவிகரன்

எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தா வண்ணம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தானும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அப்போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் போலீசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பிலே முல்லைத்தீவு போலீசார் ரவிகரனிடம் 15.02.2021 இன்று வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றிருந்தனர்.

போலீஸ் நிலையத்தில் தனது வாக்குமூலத்தினைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் போராட்டத்தில் நான் முல்லைத்தீவிலே கலந்து கொண்டமை தொடர்பிலே வாக்குமூலம் ஒன்றினைப் பெறுவதற்காக 15.02.2021 (திங்கள்) இன்று முல்லைத்தீவு போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

அவ்வாறு அழைக்கப்பட்டதற்கமைய என்னிடம் அங்கே வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வகையில் இந்த போராட்டமானது பொதுமக்கள் சார்ந்து பலர் கலந்துகொண்டு நடாத்தப்பட்டதொருபோராட்டமாகும்.

இந்தப் போராட்டத்திலே நான் கலந்துகொண்டதாகவும், போலீசார் எனக்கு நீதிமன்றத் தடைக் கட்டளையினைத் தந்ததாகவும் தெரிவித்தனர். இருப்பினும் நீதிமன்றக் கட்டளையிலே எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றும், பொதுவாகவே அக்கட்டளை இருந்ததெனவும், அதனாலேயே குறித்த நீதிமன்றக் கட்டளையினை பெற்றுக் கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்தேன்.

அத்தோடு அன்றைய சூழலில், எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தா வண்ணம் போராட்டத்தில் ஈடுபடிருந்ததை வாக்குமூலத்தில் தெரிவித்தேன்.

அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், நானும் மக்கள் பிரதிநி என்ற வகையில் அப்போராட்டத்தில் கலந்துகொண்டேன் என்பதையும் எனது வாக்குமூலத்தில் பதிவுசெய்துள்ளேன்.

மேலும் நான் போலீஸ் நிலையத்திற்கு சென்றவுடன் வாக்குமூலத்தினைப் பெற்று உடனடியாகவே என்னை அனுப்பி வைத்து விட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment