காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் : திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் : திஸ்ஸ அத்தநாயக்க

(நா.தனுஜா)

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் வரையில் அந்த அலுவலகங்கள் இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் இடம்பெற்ற போரின் பின்னர் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள், இழப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பல்வேறு ஆணைக்குழுக்களும் காரியாலயங்களும் உருவாக்கப்பட்டன.

போரினாலும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற இன மோதல்களாலும் பலர் சொத்துக்களை மாத்திரமன்றி தமது உறவினர்களையும் இழந்தனர். பலர் காணாமலாக்கப்பட்டார்கள். 

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் காலத்தில் அனைத்து இனத்தவரும் ஒன்றிணைந்து எவ்வாறு முன்நோக்கிப் பயணிப்பது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். 

இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், சர்வதேச நாடுகளும் எமது நாட்டின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. 

எனவே தற்போது அரசாங்கம் ஒரு தரப்பினரைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு, அனைத்துத் தரப்பினரதும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். 

காணாமல் போனோர் விவகாரம், காணாமல் போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியவற்றுக்கு இன்னமும் முழுமையாகத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

எனவே, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதுடன் பாதிக்கப்பட்டோருக்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் வரையில் அவை தொடர்ந்தும் இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment