ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு மத்தியில் சுமார் 840,000 கோழிகள் இபராகி மாகாணத்தில் அழிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
திங்களன்று இபராகி மாகாணத்தில் ஒரு கோழி பண்ணையில் ஒரு தொகை கோழிகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இது இந்த குளிர்காலத்தில் பறவைக் காய்ச்சல் நோயை பதிவு செய்யும் 17 ஆவது மாகாணமாக மாறியுள்ளது என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷிரோசாடோ நகரில் அமைந்துள்ள கோழி பண்ணையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 840,000 கோழிகளை கொல்லும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோழி பண்ணையிலிருந்து 3 கிலோ மீட்டர் (1.8 மைல்) சுற்றளவில் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், டோயாமா மாகாணத்தில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து சுமார் 140,000 கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் தொடங்கிய பறவைக் காய்ச்சல் குளிர்காலத்தில் பரவியதை அடுத்து, 6 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜப்பானின் வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சலால் 40 க்கும் மேற்பட்ட பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment