5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக் கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய, கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி, சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. 

இவ்வழக்கில் வசந்த கருணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜூலை 2 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்டுநா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், திலகேஸ்வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரு­ணா­கொட உள்ளிட்ட 17 பேரை இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட்பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்டமா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment