(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கைக்கு எதிரான புதிய பிரேரனையை எதிர்க்கொள்ள 47 உறுப்பு நாடுகளிடம் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமகள் பேரவையின் 46 கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆணையாளரின் அறிக்கை காணப்படுவதோடு, மற்றுமொரு புதிய பிரேரனையை இலங்கைக்கு எதிராக ஆவணப்படுத்த பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இவ்வாறு சவால்மிக்கதொரு சூழலை ஜெனிவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை முழுமையாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை, புதிய பிரேரனையை கொண்டு வரும் நாடுகளுக்கு எதிராக கடும் இராஜதந்திர போரையும் தொடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் 47 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவைப்படுகின்றது.
இது இலங்கை அரசாங்கத்திற்கு முன்னுள்ள சவால்களில் ஒன்றாகும். இதனை மையப்படுத்தியே கடந்த வாரம் இறுதியில் இந்தியா உட்பட அனைத்து நட்பு நாடுகளுக்கும் ஜெனிவாவில் ஆதரவு கோரி ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார்.
இலங்கைக்கான ஆதரவை சீனா உறுதிப்படுத்தினாலும் ஏனைய நட்பு நாடுகளின் ஆதரவு குறித்து இதுவரையில் வெளிப்படையான அறிவிப்புகள் இல்லை.
மறுபுறம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மையப்படுத்தி 6 நாடுகள் இணை அணுசரணை கூட்டு அறிக்கையொன்றினை மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்தில் ஆவணப்படுத்தியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பாரதூரமான மீறல்கள் இடம்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த கூட்டு அறிக்கையின் வலியுறுத்தல்கள் அமைந்துள்ளன.
எனவே நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நட்பு நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டியதாகியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து ஆதரவினை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment