(இராஜதுரை ஹஷான்)
ஒருமித்த நாட்டின் கொள்கைகளை மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தில் வெற்றி பெற்று நாடு பிரிக்கப்பட்டிருந்தால் பௌத்த சாசனம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 ற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அரசியலமைப்பின் ஊடாக பிளவுபடுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்தப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.
ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.
தற்போதைய இளம் சந்ததியினர் நாடு குறித்து பற்றில்லாமல் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் நாட்டை பிளவுபடுத்தும். விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால் நாடு பிளவுப்பட்டிருக்கும். அத்துடன் பௌத்த சாசனமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாக கருதப்படும்.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக செயற்பட்டமையினால் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 30(1) பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக விலகியது. நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுடன் இணைந்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.
No comments:
Post a Comment