(செ.தேன்மொழி)
வெலிக்கடை - ராஜகிரிய பகுதியில் 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபாய் பணத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் சென்று கொண்டிருந்த காரை சோதனைக்குட்படுத்தியுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், அதிலிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபாய் தொகை பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளதுடன், இவர்களுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபர்களிருவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு உத்தரவு பெற்றுக் கொள்ளவும் எதிர்ப்பார்த்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment