(செ.தேன்மொழி)
கல்னேவ - நேகம பகுதியில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பகுதியில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உதிரிப்பாகங்களாக விற்பனை செய்த இடமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள் கொள்ளைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் மாத்திரம் ஆறு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது கல்னேவ பகுதியிலிருந்து 23 மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள், மோட்டார் சைக்கிளின் இயந்திரம் உட்பட பல்வேறு உதிரிப்பாகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கெகிராவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட இலக்க தகவுகள் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினருடன் இணைந்து பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திட்டமிட்ட முறையில் மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் இவர்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
No comments:
Post a Comment