மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு : 18 பேர் பலியானதாக தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு : 18 பேர் பலியானதாக தகவல்

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உட்பட 100 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

ஆனால் மியன்மார் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

மியன்மார் ராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது. 

யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியன்மாரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் மியன்மார் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது. 

இது மியன்மார் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் ராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள்‌ உட்பட 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment