நாளை மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை : 1040 ரூபா நாள் சம்பளத்தை வழங்கினால் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை - கம்பனிகள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

நாளை மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை : 1040 ரூபா நாள் சம்பளத்தை வழங்கினால் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை - கம்பனிகள் அறிவிப்பு

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை நாளை முதலாம் திகதி மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டுமென சம்பள நிர்ணய சபையில் கடந்த 8 ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அன்றையதினம் சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதாயின் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என்றும், நாளொன்றுக்கு 16 கிலோவிற்கும் குறைவாக கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு முழு நாளுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் கம்பனிகள் சம்பள நிர்ணய சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சம்பள நிர்ணய சபையின் உறுப்பினரும் விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆர்.எம்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

நாளைய தினமும் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையை புறக்கணித்தால் அல்லது தமது தீர்மானத்தில் விடாப்பிடியாகவே இருக்குமானால் தொழில் அமைச்சரே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எம்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இம்மாதம் 8 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து தீர்மானிப்பதற்காக கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணய சபை கூடியது. 

இதன்போது 900 ரூபா அடிப்படைச் சம்பளம், 140 ரூபா வாழ்க்கை செலவு புள்ளிக்கு ஏற்ற கொடுப்பனவும் மொத்தமாக 1040 ரூபா உறுதிப்படுத்தப்பட்டது.

இருந்த போதிலும் அரசாங்கத்தின் யோசனை மற்றும் தீர்மானங்களுக்கு கம்பனிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

சம்பள பிரச்சினை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டதால் கூட்டு ஒப்பந்தம் வலுவிழந்துவிட்டதாக கம்பனிகள் சுட்டிக்காட்டியிருந்த அதேவேளை, இங்கு தொழிலாளர்களின் ஏனைய நலன்கள் கேள்விகுட்படுத்தப்பட்டிருந்தன.

இந்ந சிக்கல் நிலைமை மற்றும் வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு விவகாரம் ஆகியவை தொடர்பில் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் 14 நாட்களுக்குள் தமது சட்ட ரீதியான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என்று தொழில் ஆணையாளர் அறிவித்தார்.

அதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 162 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடியது.

எனினும் அன்றையதினம் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபையில் கலந்து கொள்ளாமல் அதனை புறக்கணித்திருந்தமையால் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான கலந்துரையாடலின் பின்னர் மீண்டும் நாளை சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment