கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்தில் அரசாங்கம் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
காலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது அரசாங்கம் விரைவாக செயற்பட்டு முழு நாட்டையும் முடக்கியதுடன் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வீடுகளுக்கே கொண்டுபோய் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. வாழ்க்கை செலவுக்காக வசதி குறைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கியிருந்தது. மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி தனக்கு தேவையான அனைத்து அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். என்றாலும் கொரோனா மீண்டும் தலைதூக்கி இருக்கின்றது. முதலாவது அலையையும் விட வேகமாக பரவி இருக்கின்றது.
சுகாதார அமைச்சர் உட்பட பல பாராளுமன்றத்தில் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. பாணியை குடித்தவர்களுக்கும் கொரோனா தொற்றி இருக்கின்றது. என்றாலும் கொரோனா தொற்று இன்னும் சமூக மட்டத்தில் பரவ வில்லை என்றே அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அத்துடன் கொரோனாவுக்கு தம்மிக்க பாணி சிறந்த மருந்தாக இருந்தால், சுகாதார அமைச்சர் அதனை பரிசோதித்துப் பார்க்க அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் எமது சுகாதார அமைச்சர் அந்த பாணியை குடித்து, மற்றவர்களும் அதனை குடிப்பதற்கு வழிகாட்டியிருந்தார். தற்போது என்ன நடந்தது. பாணியை குடித்த சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.
உண்மையான அரசாங்கமாக இருந்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்தில் நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு வந்திருப்பதையிட்டு இராஜினாமா செய்திருக்க வேண்டும்.
அதனால் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலை தொடர்பில் மிகவும் பொறுப்பில்லாமலேயே செயற்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்த மக்களே இன்று அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்திருக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment