கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தின் வளாகத்தில் டெனிஸ் பந்துக்குள் போதைப் பொருட்களை வைத்து வீசிய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் விசேட விசாரணைக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வெலிக்கந்த - கந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடைமையில் ஈடுபட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சிகிச்சை நிலையத்தின் வளாகத்திலிருந்து, இரு டெனிஸ் பந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த பந்துகளை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்ட்டிருந்த ஹெரோயின், கஞ்சா மற்றும் புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் யாருக்காவது வழங்கும் நோக்கத்திலேயே அந்த போதைப் பொருட்கள் அடங்கிய பந்து வீசப்பட்டிருக்கும் என்று சந்தேக எழுந்துள்ளதுடன், இவ்வாறு இந்த பந்தை எறிந்தவர்கள் தொடர்பில் விபரங்கள் தெரியவந்தால் அவர்களை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment