மேல் மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள், உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்க தீர்மானம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

மேல் மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள், உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்க தீர்மானம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பாடசாலை வாகன சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை திங்கட்கிழமை தொடக்கம் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளன.

அதற்கமைய மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானிக்கபடவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதேவேளை, மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக் கவசம் அணியாமை தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2734 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இவர்களுள் 2600 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் மற்றுமன்றி அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்குபவர்களுக்கும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கொள்ளப்படும் உடனடி செயற்பாடுகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment