"டொனால்ட் டிரம்பை பழிவாங்குவோம்" - ஈரானின் அதி உயர் தலைவர் மிரட்டல் - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

"டொனால்ட் டிரம்பை பழிவாங்குவோம்" - ஈரானின் அதி உயர் தலைவர் மிரட்டல்

ஈரானின் புரட்சிகர ராணுவப் படையின் தலைவர் காசெம் சுலேமானீயைக் கொன்றதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, ஈரானின் அதி உயர் தலைவர் அலி கொமைனி வெளிப்படையாக இணையத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அலி கொமைனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், ஒரு பெரிய போர் விமானம் அல்லது டிரோனின் நிழலில், டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு படம் பகிரப்பட்டிருக்கிறது.

'பழிவாங்கப்படுவது நிச்சயம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் ட்விட் செய்த மற்றொரு ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

@khamenei_site என்கின்ற ட்விட்டர் கணக்கு போலியானது எனவும், இந்தக் கணக்கு ட்விட்டர் தளத்தின் கொள்கைகளை மீறி விட்டதாகவும், ட்விட்டர் தரப்பில் இருந்து ரொய்ட்டர்ஸ் முகமைக்கு கூறப்பட்டது.

இந்தப் பதிவை, சுமாராக மூன்று லட்சம் பேர் பின் தொடர்பவர்களைக் கொண்ட ஆயதுல்லா கொமைனியின் ஃபர்ஸி ட்விட்டர் கணக்கிலும் பகிரப்பட்டது. பின்னர் அக்கணக்கில் இருந்தும் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

அந்த ட்விட்டில், ஃபர்ஸி மொழியில் பழிவாங்கல் எனும் சொல் சிவப்பு நிறத்தில் இருந்தது. "சுலேமானீயைக் கொன்றவர். இவர்தான் சுலேமானீயை தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்" என அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஆயதுல்லா கொமைனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 'எப்போது வேண்டுமானாலும் பழிவாங்கப்படும்' என்று கடந்த டிசம்பர் 16ஆம் திகதி கொமைனி கூறியிருந்த கருத்துடன் இந்தப் படம் பகிரப்பட்டிருந்தது.

டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, ஈரானிய தலைவருக்கு தடை விதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழவே ட்விட்டர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தன் ட்விட்டர் கணக்கில் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத் தாக்குதலைத் தூண்டும் விதத்தில் பதிவு செய்ததாகக் கூறி கடந்த மாதம், அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

"இதுபோன்ற அடாவடித் தனமான, மனநிலை சரியில்லாத ஒருவர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்வதற்கு அழைப்பு விடுக்க முடியும். அவர் ஏன் ட்விட்டரில் இருந்து புறக்கணிக்கப்படவில்லை?" என ஒரு ட்விட்டர் பயனர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

"டிரம்பு மீது தடை விதிக்கப்பட்டது, ஆனால் இது (டிரம்ப் கொலை மிரட்டல்) பதிவு ஏற்றுக் கொள்ளக் கூடியது. இது என்ன நகைச்சுவையா?" என மற்றொரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார்.

ஓராண்டு காலத்துக்கு முன், ஈரானின் தலைநகரான பாக்தாத்தில், அந்த நாட்டின் புரட்சிகர ராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.

இவர் தலைமையில்தான், ஈரானுக்கு ஆதரவான ராணுவக் குழுக்கள் வளர்ந்தன. இதை முதலாக கொண்டே ஈராக் மற்றும் சிரியாவில் தன் ராணுவ இருப்பை ஈரான் அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

"இவர் (காசெம் சுலேமானீ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல லட்சக் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணம்" என அப்போது டிரம்ப் கூறியது நினைவு கூரத்தக்கது.

பிபிசி
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 

No comments:

Post a Comment