'தாமதமாகவேனும் எமது பரிந்துரைகளை அரசாங்கம் புரிந்துகொண்டமை மகிழ்ச்சி' : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

'தாமதமாகவேனும் எமது பரிந்துரைகளை அரசாங்கம் புரிந்துகொண்டமை மகிழ்ச்சி' : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் வரவு செலவு திட்ட விவாதம் என்பவற்றின் போது பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை நாம் முன்வைத்தோம். அவற்றில் சிலவற்றை அரசாங்கமானது தாமதமாகவேனும் புரிந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த தேசிய தேர்தல்களின் போதும் வரவு செலவு திட்ட விவாதத்தின் போதும் மகளிர் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல பரிந்துரைகளை நாம் முன்வைத்தோம்.

இதற்கு எதிர்த்தரப்பினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். 220 இலட்சம் மக்கள் வாழ்கின்ற எமது நாட்டில் 58 சதவீதமானோர் பெண்களாவர். 42 - 57 இலட்சத்திற்கு இடைப்பட்டோர் மாதாந்த சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இதன்போது பாவிக்கும் பொருட்களால் பாரதூரமான சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது மாதாந்த பிரச்சினையால் மூன்றில் ஒரு பங்கினர் பாடசாலைகளுக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 13 இலட்சம் மாணவிகள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுகின்றனர். 

தாமாதமாகவேனும் அன்று நாம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் புரிந்து கொண்டமைக்கு நாம் நன்றி கூறுகின்றோம். முன்னர் நாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளன. எனவே எமது பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்துக்களை முன்வைப்பதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை. நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் சுகாதார பாதுகாப்பு துவாய்களை வழங்கும் வரை இது தொடர்பான ஜனநாயக ரீதியான போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment