மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது, மாற்று நடவடிக்கைகளை ஏற்க முடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது, மாற்று நடவடிக்கைகளை ஏற்க முடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன்

பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை - இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித்தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலப் போராட்டத்தில் தமிழக மீனவர்களுடைய பங்கு அளப்பரியது எனவும், அண்மையில் உயிரிழந்த நான்கு மீனவர்கள் தொடர்பாக தமிழ் மக்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு. பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில், வட பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கிறார்கள்.

ஆகவே, எமது கடற் பரப்புக்குள் அவர்கள் வருவதும் அவர்களது பரப்புக்குள் நாங்கள் போவதும் காலாதி காலமாக நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், தற்போது இந்திய மீனவர்களின் வள்ளம் மூழ்கடிக்கப்பட்டதும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இலங்கைக் கடற்படையினுடைய கப்பலில் அடிபட்டுத்தான் மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கை ஏற்புடையது அல்ல. நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். எனவே, நிச்சயமாக இது அனுதாபத்துடன் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

எமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.

மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இனிமேல் நடைபெறாமலிருக்க குறைந்தபட்சம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

ஆகவே, அவ்வாறானவர்கள் எமது கடல் வளத்தைச் சூறையாடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது கொழும்பு அரசாங்கமே. ஆனால் அவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை.

எனினும், வட கடலில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் இந்திய தமிழ் மீனவர்களும் வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும் தொடர்ச்சியாக மீன் பிடிப்பதென்பது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

அவை, சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டியதாகும். இதனை இரு தரப்பு மீனவர்கள், இரு தரப்பு அரசாங்கங்கள் இணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும். இதனைவிடுத்து வேறு நடவடிக்கைகளை எடுப்பதென்து தவறானது.

இதேவேளை, எமது அனைத்து தமிழ் மக்களின் அனுதாபங்களும் இறந்த தமிழக மீனவர்கள் மேல் நிச்சயமாக உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment