வடக்கு மாகாணத்தில் சிங்கள மொழியில் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை, தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
வட மாகாணத்தில் நடத்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களுக்கு, இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்ட சான்றிதழ், முழுமையாக சிங்கள மொழியில் அச்சிடப்பட்டிருந்ததை அவதானித்த இளைஞர்கள், அதற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சான்றிதழை ஏற்பதற்கு இளைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவிப் பணிப்பாளர் தபேந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த சான்றிதழ் இளைஞர்களுக்கு வழங்குவதற்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும், இந்த சான்றிதழில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கையெழுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்று காரணமாக தமிழ் மொழி எழுதுவினைஞர்கள் கடமைகளுக்கு வராததால், சிங்கள மொழி எழுதுவிளைஞர்களின் ஊடாக இந்த சான்றிதழ் அச்சிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாதமையினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தேவையான மொழியில் சான்றிதழை வழங்குவதற்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment