ஆயிரம் ரூபா அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார கால அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

ஆயிரம் ரூபா அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார கால அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(எம்.ஆர்,எம்.வஸீம்)

2021 வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார காலம் வழங்குவதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீர்மானித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது, தோட்ட கம்பனி சம்மேள பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர்கள் நாளாந்தம் மேலதிகமாக 2 கிலாே கொழுந்து பெற்றுத்தர வேண்டும். அத்துடன் தாெழிலாளர்கள் தொழிலில் இருந்து விட்டுச் செல்லும்போது வழங்கும் தொழிலாளர் பணிக் கொடையை வழங்குவதற்கு அவர்கள் போதுமானளவு நாளாந்த கடமையை மேற்கொள்வதில்லை. அதனால் தொழிலாளர்கள் அனைவரும் வருடத்துக்கு 180 நாள் தொழிலில் ஈடுபட்டிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றனர்.

இதன்போது தோட்டத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட்டே ஆக வேண்டும். தேயிலை கூடையின் பாரம் மற்றும் தொழிற்சாலையில் அகற்றப்படுவதாக தெரிவித்து தொழிலாளர்களால் பறிக்கப்படும் கொழுந்தில் குறைப்பு செய்வது நியாயம் இல்லை என குறிப்பிட்டனர்.

இவர்கள் இரு தரப்பினரது கருத்துக்களை ஆராய்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், நாளொன்றுக்கு மேலதிகமாக ஒரு கிலாே கொழுந்து வழங்குதல் மற்றும் வருடத்துக்கு 180 நாள் தொழில் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை. எந்த நிலைமையின் கீழாவது தாேட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா ஆக வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் எந்த காரணம் கொண்டும் மாற்ற முடியாது.

அவ்வாறு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க முடியாத கம்பனிகள் இருக்குமாக இருந்தால், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். அதன் பிரகாரம் இந்த தோட்டங்களை அரசாங்கத்தினால் அல்லது வேறு முகாமைத்துவ நிறுவனம் ஒன்றினூடாக நடத்திச் செல்ல அரசாங்கம் தயார். அதனால் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள இறுதியாக மேலும் ஒரு வார கால அவகாசம் கம்பனி உரிமையாளர்களுக்கு வழங்குகின்றேன் என்றார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ப.ராமேஷ்வரன், சுஜித் பெரேரா மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரும் தொழிலாளர் சம்மேளத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment