ரூத் ருத்ரா
கொரோனா தொற்று காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (27) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒன்று திரண்ட பொதுமக்கள் சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி தங்களது மத நம்பிக்கை பிரகாரம் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மும்மொழிகளிலும் சுலோகங்களை ஏந்தியவாறு பொதுமக்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குடா முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனசா எரிப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர். கையில் வெள்ளைத் துணிகளை கட்டி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதில் வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சட்டத்தரணி ஹபீப் றிபான், மற்றும் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் வருகை தந்து போராட்டம் வாகனப் போக்கு வரத்துக்கு இடையூறுகள் ஏற்படாமல் கடமைகளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment