அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன், "வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் வழங்குவதற்கு கையிருப்பில் இருக்கும்போது அதைப் போட்டுக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நானே அதை போட்டுக் கொண்டேன்," என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியதற்காக டிரம்பின் நிர்வாகத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் கமலா ஹாரிஸும் அவரது கணவர் டோ எம்ஹோஃபும் அடுத்த வாரம் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த ஆண்டு பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் நூறு நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் ஒரு கோடியே 80 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அந்நாட்டில் மட்டும் 3.19 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப், தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் திட்டம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாத உயர்நிலையில் இருக்கும் ஒரு சிலருள் முதன்மையானவராக டிரம்ப் கருதப்படுகிறார்.
இது பற்றி சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கேட்கப்பட்டது, "தடுப்பூசி போட்டுக் கொள்ள எந்த கால நேரத்தையும் நான் குறித்திருக்கவில்லை. சரியான நேரத்தில் அதை போட்டுக் கொள்வேன்," என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment