(காரைதீவு நிருபர்)
கொரோனா நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கின்ற முனைப்புகளில் உலக நாடுகள் அனைத்தும் அதிதீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில் பேரினவாதத்துக்கு விருந்து போடுகின்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
காரைதீவில் உள்ள அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்தவை வருமாறு புராதன இடங்களை அடையாளம் கண்டு அந்த இடங்களில் எந்தவொரு பொருள் காணப்பட்டாலும் அதற்கு பௌத்த முலாம் பூசுகின்ற வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் பௌத்தர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தனர் என்கிற ஊகம், உண்மை நிலவுகின்றது.
இந்நிலையில் ஏதேனும் இடிபாடுகள், அடையாளங்கள் கண்டு கொள்ளப்படுகின்றபோது அதை சிங்கள பௌத்தத்துக்கு உரியது என்று நிலைநாட்ட முற்படுகின்ற மனோநிலையில் பிக்குகளும், இராணுவ அதிகாரிகளும் சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
கொரோனாவுக்கு மருந்து முக்கியமா? அல்லது புதைந்து கிடக்கின்ற அடையாளச் சின்னங்களை வைத்துக் கொண்டு பேரினவாதத்துக்கு விருந்து வைப்பது முக்கியமா? என நான் வினவுகின்றேன்.
எல்லா நாடுகளும் முற்போக்கு பாதையில் முன்னோக்கிப் பயணிக்க விரும்புகின்றன. ஏனோ தெரியவில்லை எமது நாட்டு ஆட்சியாளர்கள் பிற்போக்குப் பாதையில் பின்னோக்கிப் பயணிக்கவே விரும்புகின்றனர்.
அதிலும் குறிப்பாக பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த தனி சிங்கள சட்டத்தைக் கொண்டு வந்து இது ஒரு சிங்கள நாடு என்று காண்பிப்பதற்கு முயன்றதை நோக்கியும், 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இது ஒரு பௌத்த நாடு என்று புதிய யாப்பைக் கொண்டு வந்து நிறுவ முற்பட்டதை நோக்கியும் பின்னோக்கி இன்றைய ஆட்சியாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இது பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற நடவடிக்கையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமை நீடிக்கின்றது.
ஆள்கின்ற இனம், ஆளப்படுகின்ற இனம், அடக்குகின்ற இனம், அடக்கப்படுகின்ற இனம் என்று மக்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். புரட்சிகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் சமத்துவமின்மையே ஆகும். எனவே சமத்துவமான நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
மொழி, மதம், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலங்களைக் கையாள்வதிலும் சமத்துவம் வேண்டும். இவ்விதமான சமத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டியது முக்கியமான தேவையாக உள்ளபோது அதை விடுத்து பாரபட்சம், பக்கச்சார்பு, ஓர வஞ்சகமாக செயற்படுகின்றபோது இந்நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினை இன்னமும் விஸ்வரூபம் எடுத்து விடும்.
இந்த நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் வாழவில்லை. தமிழ், முஸ்லிம், பறங்கியர்களும் இருக்கின்றனர். எனவே எல்லோருக்கும் பொதுவான ஓர் ஆட்சியை செய்யுங்கள் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றோம். சகல மக்களையும் சமத்துவமாக மதியுங்கள்.
இனப் பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக தீர்வு கண்டு தாருங்கள். ஐந்து தடவைகளுக்கு ஒரு தடவை ஆட்சி வரும், பின்னர் அகன்று விடும். ஆனால் இனப் பிரச்சினைக்கான தீர்வுதான் இல்லாமல் போய் கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் இவற்றை கருத்தில் கொண்டு கவனமாக செயற்பட வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

No comments:
Post a Comment