ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அல்போர்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத் தொடர் பகுதி அசர்பைஜானுடனான எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலைத் தொடர் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், அல்போர்ஸ் மலையில் நேற்றுமுன்தினம் 20 க்கும் அதிகமானோர் குழுவாக இணைந்து மலையேறியுள்ளனர். அதற்கு முன்னதாக இரவு நிலவிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலைத் தொடரில் பனியின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
வீரர்கள் மலையேறிய போது மலையின் ஒரு பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் மலையேறிய அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த ஈரான் மீட்புப் படையினர் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஹெலிகொப்டரில் பயணம் செய்து மாயமானவர்களை தீவிரமாக தேடினர்.
அதில் மலையேறு வீரர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பனிப்பொழிவு தொடர்பான வானிலை மாற்றங்களை சரியாக கணிக்காமல் மலையோற்றத்தில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment