மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை வடிவமைப்பு உற்பத்தி தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை வடிவமைப்பு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த கைத்தறி நெசவு நிலையம் மூடப்பட்டு, அம்பாறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை மற்றும் அதனை மீள புனரமைத்து புதிய வடிவமைப்புடன் ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இத்தொழில் தொடர்பான பயிற்சிகளை பெண்களுக்கும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குமாக வழங்கி, சுயதொழி வாய்ப்பினை அதிகரிக்கச் செய்து அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறித்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கைத்தறி, புடவைக் கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், அவற்றுக்கான சந்தை வாய்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன், மேலதி அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்கு மாகாண தொழில்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.இளங்குமுதன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment