தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும் - எங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது : அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும் - எங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது : அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க

நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. பல தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. எனவே அதற்கு உரிய முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து அதனை பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து அங்கு சுற்றுலா தளமாக அதனை மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஜீவராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நுவரெலியா அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ண தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க நிமல் பியதிஸ்ஸ நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்று ஜனாதிபதியின் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாங்கள் நுவரெலியா கிடுமுட்டி அக்கரபத்தனை பொகவந்தலாவ பலாங்கொடை வழியாக கதிர்காமம் செல்வதற்கான ஒரு பாதையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அதனை செய்ய முடியுமாக இருந்தால் நுவரெலியா வசந்த காலத்தை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். இதன் மூலம் அதிகமான உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க முடியும். உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்தால் எங்களுடைய உள்நாட்டு உற்பத்திகளுக்கும் ஏனைய வியாபாரிகளுக்கு சிறந்த ஒரு இலாபத்தை ஈட்ட முடியும். அதுவே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

அதே நேரத்தில் நாங்கள் எந்த காரணம் கொண்டும் அமெரிக்காவின் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம். ஏனெனில் எங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. எங்களுடைய நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வேண்டியவர்கள் நாங்களே.

இன்று பல கருத்து முரண்பாடுகள் இருக்கின்றது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதேநேரம் உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் செவிமடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நகரத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவோம் என்பதையே நான் உங்களிடம் கூற விரும்புகின்றேன்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment