(செ.தேன்மொழி)
பியகம பகுதியில் போலி நாணயத்தாள்களை தயாரித்து அவற்றை செல்லுபடியாகும் பணத்துடன் ஒன்று சேர்க்கும் மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
பியகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து 14 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 33,250 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர்கள் தற்காலிகமாக வசித்து வந்த வீடொன்றிலிருந்து 5 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 11,860 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தங்களிடமிருந்த போலி நாணயத்தாள்களை கொடுத்து, செல்லுபடியான பணத் தொகையை பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடுவெல மற்றும் சிலாபம் ஆகிய பகிதிகளைச் சேர்ந்த 26, 42, 48 வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அச்சு இயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment