கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி சுமந்திரன் வாதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி சுமந்திரன் வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார். 

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை (முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்) உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே, ஹில்மி அஹமட் மற்றும் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷிதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ஏர்மிஸா ரீகல் ஆகியோருடன் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும் போது அவர் இந்த இடைக்கால தடைக்கான கோரிக்கையை முன்வைத்தார். 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில் 5 மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக ஒரு மனுவும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களாலும் இந்த 11 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

குறிப்பாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரசன்னமானார். 

இதனைவிட, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 5 மனுக்களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவாவசம் முன்னிலையானார். 

இதனைவிட கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில் தகனம் செய்யப்பட்ட இருவரின் மகன்மாரான பயாஸ் யூனுஸ் மற்றும் ரபாய்தீன் நெளபர் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த மனுக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அஜராகினர். 

இதேவேளை கத்தோலிக்கர்களான ஓசல லக்மால் சார்பில் தாக்கல்ச் செய்யப்பட்ட மனுவில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், சிரந்த ரன்மல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவும் ஆஜராகினர். இம்மனுக்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தன. 

இதனைவிட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் உள்ளிடோரும் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயாவும் மன்றில் வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் பிரசன்னமாகினர். 

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோர் அனைத்து மனுக்களிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜரானார். 

இந்நிலையில் முதலில் எஸ்.சி.எப்.ஆர். 502 எனும் மனு பரிசீலனைக்கு வந்தது. முற்பகல் 10.40 மணியளவில் அம்மனு விசாரணைக்கு வந்தது. அம்மனு சார்பிலும் பிரிதொரு மனுசார்பிலும் (முஸ்லிம், கத்தோலிக்க ஒருவர்) சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை ஆரம்பித்தார். 

அவரது வாதங்கள் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்தது. இதன்போது முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும், உயிரிழந்த பின்னர் ஒரு நாள் மீள தாங்கள் எழுப்பப்படுவோம் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமது நம்பிக்கை பிரகாரம் செயற்படுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரை ஊடாகவும் அதுசார்ந்த மதத்தை தடையின்றி பின்பற்றுவதற்கான உரிமை 14 ஆவது உறுப்புரை ஊடாகவும் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 

அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பு ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த அவசர கால நிலைமையின் போதே முடியும் எனவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார். 

அத்துடன் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்ட விரோதமானது என தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலையும் விஞ்சிய செயற்பாடுகளின் பின்னனி என்ன என கேள்வி எழுப்பினார். 

கொரோனா காரணமாக முதல் முஸ்லிம் நபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி உயிரிழக்கும் போதும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார சேவைகள் பணிமனையின் இணையத்தில் இருந்த போதும், உடனடியாக இரவோடிரவாக அது மாற்றப்பட்டது எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது என அவர் உயர் நீதிமன்றில் கேள்வி எழுப்பி அதன் நோக்கத்தை நியாயமற்றது என விளக்கினார். 

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதங்களை முன்வைத்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் சடலங்களை எரிப்பதால் அந்த வைரஸ் பரவும் என எந்த ஆய்வுகள் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார். 

இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொவிட் தொற்றினால் உயிரிழந்த தமது உறவுகளை அடக்கம் செய்ய அனுமதியுள்ள நிலையில், அங்கு அதனூடாக வைரஸ் பரவியதாக எந்த விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். 

இலங்கையின் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழும், அடக்கம் செய்ய அனுமதியுள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்தும், தனிமைப்படுத்தல் நிலையங்கலில் இருந்தும் கழிவுகள் திறந்த சூழலுக்கே செல்வதாக சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை புறக்கணித்து செயற்படுமளவுக்கு இலங்கையில் இந்த விடயத்தில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவு பூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய சுமந்திரன், அவ்வாறான ஆய்வுகள் இருப்பின் அதனை உலக சுகாதார ஸ்தாபனமே தனது வழிகாட்டலில் உள்ளீர்த்திருக்கும் என்றார். 

இதன்போது இந்தியாவின் மும்பை மற்றும் கல்கத்தா மேல் நிலை நீதிமன்றன்ங்களில், கொவிட் மரணங்களின் போது சடலங்களை எரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், அந்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார். 

இலங்கையை உதாரணம் காட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்ம்மனுக்களை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழி காட்டல்களை விட சிறந்த இலங்கையின் நடைமுறையை ஏற்க முடியாது என கூறி அந்நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். 

இந்நிலையில் மனித உரிமை என்பது, இறந்த ஒருவரின் சடலத்துக்கும் உள்ளது என அந்த தீர்ப்புக்களில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், கெளரவமான இறுதிக் கிரியைகள் ஒவ்வொருவரினதும் உரிமை என வாதிட்டார். 

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2170/8 ஆம் இலக்க வர்த்தமானி சட்ட விரோதமானது என வாதிட்ட சுமந்திரன், மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், தற்காலிக நிவாரணமாக உடனடியாக சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார். 

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் ஆகியோர் உணர்வுபூர்வமாக மன்றில் வாதங்களை முன்வைத்தனர். 

மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், தகனம் மட்டும் செய்யப்படல் வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதனால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்ட வலுவற்றது எனவும் வாதிட்டார். ஏனைய சட்டத்தரணிகளும் அதனை ஒத்த வாதங்களையே மன்றில் கொண்டு வந்தனர். 

இந்நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரில் புள்ளே வாதங்களை ஆரம்பித்தார். 

சடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் எந்தவொரு மதம், இனத்தவரை வெறுப்பூட்டுவதற்காக அல்லது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட நெரின் புள்ளே, அது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார். 

கொவிட் தொற்றினால் மரணமடைபவரை அடக்கம் செய்யலாம் என வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்க்கப்பட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு அந்த ஸ்தாபனம் சடலங்கள் ஊடாகவும் வைரஸ் பரவலாம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் வாதிட்டார். 

அவரது வாதங்கள் நிறைவு பெறாத நிலையில், மீள இன்றும் வாதங்கள் தொடரவுள்ளது. அதன்படி மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் இன்றைய தினம் முற்பகல் 10.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழாமின் பெரும்பான்மை முடிவின் படி குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment