(எம்.ஆர்,எம்.வஸீம்)
ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பொன்றை அங்கிகரித்துக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு கடந்த சனிக்கிழமை கூடியபோதே புதிய யாப்புக்கு அங்கிகாரம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், புதிய யாப்பின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவு கட்சியின் நிறைவேற்றுக்குழு எடுக்கும் தீர்மானத்தின் பிரகாரமாகும். இது எமது கட்சி யாப்பின் முக்கியமான அம்சமாகும். கட்சியின் பதவிகள் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தெரிவுசெய்து கொள்வது சிறந்த ஜனநாய முறையாகும்.
நிறைவேற்றுக் குழுவுக்கு கட்சியின் தலைவரால் 50 பேரை தெரிவு செய்யலாம். என்றாலும் ஏனைய உறுப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்வதன் மூலம் 500 க்கும் மேற்பட்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
கட்சி தலைவரால் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களும் முகாமைத்துவ குழுவின் பரிந்துரைக்கமைய மற்றும் கட்சி செயற்குழுவின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறும். அதனால் கட்சி தலைவருக்கு நினைத்த பிரகாரம் செயற்பட முடியாமல் போகின்றது.
இவ்வாறு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், இளைஞர் யுவதிகளின் எதிர்கால திட்டம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக யாப்பு அமையப் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை கூட்டி, சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் நிலையில், கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்வரும் 5 வருடத்துக்கு பலாத்காரமாக எழுத்திக் காெண்டபோது, அந்த தீர்மானத்துக்கு அன்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்பதற்காகும். எனவே ஐக்கிய மக்கள் சக்தி யாப்பில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு யாருக்கும் இடம் கிடைப்பதில்லை என்றார்.
No comments:
Post a Comment