கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்.
2020.11.30 பாராளுமன்றில் அவர் ஆற்றிய உரையின்போதே மேற்படி வேண்டுகோளினை விடுத்தார்.
அவரது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுவரையில் உலகளாவிய ரீதியில் 60 மில்லியன் எண்ணிக்கையிலானோருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 40 மில்லியன் எண்ணிக்கையிலானோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 1.5 மில்லியன் அளவிலானோர் கொரோனாவினால் மரணித்துள்ளனர். இவ்வாறு மரணித்தவர்களின் உடல்களை அவர்களது சமய விருப்பத்தின்படி இறுதிக் கிரிகைகளை செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு மார்ச் மாதம் 24 ஆம் திகதி உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் மரணித்த உடல்களினை அடக்கம் செய்வதனால் எவ்வித ஆபத்துக்களும் வரப்போவதில்லை என இலங்கை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் வேந்தர் ஜினதாச கட்டுபெத்த அவர்களும் தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதன் இறந்ததற்கு பிற்பாடு அவரது பூதவுடலுக்கு கொடுக்கும் இறுதி மரியாதைதான் அவரது உடலினை சமய முறைப்படி இறுதிக் கிரிகைகளை செய்து நல்லடக்கம் செய்வது என எங்களது மார்க்கத்தில் குறிப்பிடப்படுள்ளது.
இதனால்தான் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த ஜனாஸா விடயத்தில் பாரியதொரு எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். மாறாக நாம் இனங்களுக்கிடையில் பிரச்சனைகளை தோற்றுவிப்பதற்காக இதனை கேற்கவில்லை.
இதுவொரு பௌத்த நாடு. இப்பாராளுமன்றிலும் பெரும்பான்மையாக பௌத்தர்களே இருக்கின்றீர்கள். பௌத்த மதத்தில் புத்தர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் கஷ்ட்டத்திலும், பிரச்சினைகளிலும் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்யும்படி. இன்று இந்த ஜனாஸா விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பாரிய மன உளைச்சலில் இருக்கின்றார்கள்.
ஆகவே தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், சுகாதார இராஜாங்க அமைச்சர் ஆகிய அனைவரிடமும் தயவாய் வேண்டிக் கொள்கிறேன், எங்களது முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி தாருங்கள் என தெரிவித்தார்.
ஐ.எம்.மிதுன் கான்
No comments:
Post a Comment