பெரிய வெங்காயம் எனும் போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட ரூபா. 19 மில்லியன் (ரூபா. 1.9 கோடி) பெறுமதியான மஞ்சள் கட்டிகளை, சுங்கத் திணைக்களம் மீட்டுள்ளது.
நான்கு கொள்கலன்கறில் இறக்குமதி செய்யப்பட்ட 25,000 கிலோ கிராம் (25,450 kg) நிறையுள்ள மஞ்சள் தொகுதியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
புறக்கோட்டையில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரினால் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த 4 கொள்கலன்களை கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்டுள்ள 25,450 கிலோ கிராம் மஞ்சளின் பெறுமதி ஒரு கோடி 90 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபா (ரூபா. 19,087,500) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான சுங்க வரிகள் உள்ளிட்ட ஏனைய வரிகளாக, ரூபா. 25 இலட்சத்து 95 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும், ஆயினும் பெரிய வெங்காயம் எனும் போர்வையில் மேற்கொண்ட இறக்குமதிக்கு அமைய, சுங்க வரிகள் உள்ளிட்ட ஏனைய வரிகளாக, ரூபா. 26,880 மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் வரிகளுடனான அதன் மொத்தப் பெறுமதி ரூபா. 2 கோடிக்கும் அதிகம் (ரூபா. 21,682,500) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பெரிய வெங்காயம் எனும் போர்வையில் வெவ்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் சுங்கத் திணைக்களம் மிகவும் அவதானமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குள் மஞ்சள் இறக்குமதியும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment