வாழைச்சேனை சுகாதார பிரிவில் 415 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு - பத்து பேருக்கு எச்சரிக்கை சிவப்புத்துண்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

வாழைச்சேனை சுகாதார பிரிவில் 415 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு - பத்து பேருக்கு எச்சரிக்கை சிவப்புத்துண்டு

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை 415 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, பேத்தாழை, கருங்காலிச்சோலை பிரதேசத்திலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் டெங்கு தடுப்பு உதவியாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, டெங்கு நோய் பரவும் வகையில் நீர்த்தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்த பத்து பேருக்கு எச்சரிக்கை சிவப்புத்துண்டு வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் சுத்தமில்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை 415 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் மாத்திரம் 25 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, வீட்டு வளாகத்தினுள் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நீர் தேங்கிக் காணப்படும் பொருட்கள், கழிவுப்பொருட்கள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் அகற்றப்பட்டு, வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கு மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment