கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவில் ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களின் முடிவுக்கமையவே தனிமைப்படுத்தல் நீக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவில் ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களின் முடிவுக்கமையவே தனிமைப்படுத்தல் நீக்கப்படும்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலைடியவேம்பு ஆகிய பிரதேசங்கள் 14 நாட்களின் பிற்பாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்னர் 48 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதுவித கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்படாத பட்சத்தில் தனிமைப்படுத்தலை நீக்குவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்கு சிபார்சு செய்யப்படுமென்றும் ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களின் முடிவுக்கமையவே தனிமைப்படுத்தல் நீக்கப்படும் எனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கொவிட் 19 தொடர்பான இன்று (6) விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்ற வேளை, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் காணப்படும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலைடியவேம்பு ஆகிய பிரதேசங்கள் கடந்த 26ம் திகதி முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், கல்முனைப் பிராந்தியம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கொவிட் நோயாளிகள் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் இனங்காணப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக கொவிட் தொற்று நோயாளிகள் இனங்காணப்படுகின்றமை ஆரோக்கியமற்ற நிலையைத் தோற்றுவித்திருப்பதாகவும், குறித்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கால எல்லையை வெகு விரைவாக நீக்குவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும், இதற்கு மக்கள் பூரண ஒத்துளைப்பு வழங்க வேண்டும்.

மேலும், தனிப்படுத்தப்பட்டுள்ள 14 நாட்களின் பிற்பாடு வரும் 48 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதுவித கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்படாத பட்சத்தில் தனிமைப்படுத்தலை நீக்குவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்கு சிபார்சு செய்யப்படுமென்றும் ஆளுனர் மற்றும் ஜனாதிபதி செயலகங்களின் முடிவுக்கமையவே தனிமைப்டுத்தல் நீக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

மேலும், 48 மணித்தியாலங்களுக்குள் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், தனிமைப்படுத்தல் தொடர்வதுடன், மக்கள் வெளியில் அநாவசியமாக நடமாடித் திரியாமல், தங்களது பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்து சுகாதார நடைமுறைகளுக்கமைய அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வெளியேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment