(இராஜதுரை ஹஷான்)
எம்.சி.சி. ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப் பெற்ற 10 மில்லியன் டொலர் நிதி குறித்து கடந்த அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் தேசிய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ஒப்பந்தில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கடந்த அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை இரகசியமான முறையில் கைச்சாத்திட முயற்சித்தது.
புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பந்த காரணிகளை கொண்டு முதற்கட்டமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. இதனை எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு குழு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிதி குறித்து கடந்த அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை. இந்நிதி குறித்து கணக்காளர் நாயகத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எம்.சி.சி ஒப்பந்தம் ஊடாக முதற்கட்ட அடிப்படையில் கிடைக்கப் பெற்ற 10 மில்லியன் டொலர் குறித்து கடந்த அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்காது என்றார்.
No comments:
Post a Comment