(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் எந்தவித திட்டமிடலும் இல்லை எனவும், அதனால்தான் மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை கடந்த 23ஆம் திகதி திறப்பதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் தீர்மானித்தீர்கள்.
இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 20ஆம் திகதி மாவட்ட சுகாதார பிரிவு, பொது சுகாதாரத் துறை மற்றும் போக்கு வரத்து அதிகார சபைக்கு, 23ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், பாடசாலைகளை திறப்பதற்கு எடுத்த காலயெல்லைக்குள் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை பூர்த்தி செய்ய காலம் போதுமானதாக இல்லை.
நாட்டில் இருக்கும் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளில் சுமார் 5 ஆயிரம் பாடசாலைகளை திறக்க தீர்மானித்திருக்கின்றது. அதில் தரம் 6 தொடக்கம் 13 வரை சுமார் 33 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளை திறக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் தெரிவித்தீர்கள்.
ஆனால் இன்று கிளிநொச்சியில் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக மூடப்பட்டுள்ளது. கண்டி கல்வி வலயத்தில் 45 பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. குருநாகலையிலும் சில பாடசாலைகள் ஆளுநரின் கோரிக்கைக்கமைய மூடப்பட்டிருக்கின்றன.
அத்துடன் பாடசாலைகளில் தொற்று நீக்கம் செய்வதற்கும் ஏனைய சுகாதார தேவைகளுக்கும் என 100 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ரூபாவும், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும், 200 க்கும் அதிக மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளுக்கு 12 ஆயிரம் ரூபாவும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தீர்கள். ஆனால், ஒருசதமேனும் குறித்த கல்வி காரியாலயங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோன்று பாடசாலை சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மாணவர்களை இடைவெளியை பேணி ஏற்றி வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வேன் ஒன்றில் 20 மாணவர்களை ஏற்றுவதாக இருந்தால், இடைவெளி விட்டு அனுமதிக்கும்போது 10 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும். இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் சேவையில் ஈடுபட முடியாது என வேன் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
முறையான திட்டமிடலுடனே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றே தெரிவிக்கின்றோம். ஏனெனில், டிசம்பர் 23ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருக்கின்றது. ஜனவரியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற இருக்கின்றது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் பாடசாலை கட்டமைப்பு மூடப்பட்டிருக்கின்றது. அதனால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு முறையான திட்டமிடலுன் இதனை மேற்கொள்ளுங்கள்.
கல்வி அமைச்சின் செயலாளர் சொன்னதற்காக அவசரப்பட்டு மேற்கொள்ள வேண்டாம். முறையான வேலைத்திடம் ஒன்றை அமைத்துக் கொண்டு பாடசாலைகளை திறந்திருக்கலாம். தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளபோதும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment