எஸ்.எம்.எம்.முர்ஷித்
கொரோனா வைரஸ் இடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வியாபார உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முச்சக்கர வண்டி மற்றும் வேன் சாரதிகள், இறைச்சிக்கடை, பலசரக்கு கடை, மருந்துக்கடை உரிமையாளர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், சுப்பர் மார்க்கட் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதன் காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் உரிமையாளர்கள் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வாறு சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற விளக்கங்கள் வழங்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம.எம்.றுவைத், அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், செயலக உத்தியோகத்தர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கொரோனா பாதுகாப்பு தொழில்நுட்ப வழிகாட்டல் அணியின் வளவாளர்களால் கொரோனா வைரஸ் இடர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி, மேற்கு பிரதேச செயலகங்கள், ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேச சபை கோறளைப்பற்று மத்தி, மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், வாழைச்சேனைப்பொலிஸ் ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் இடர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.
No comments:
Post a Comment